கோவை நெடுஞ்சாலையில் காரை வழிமறித்து கொள்ளை முயற்சி.. 4 பேர் கைது !

Spread the love

கோவையில் நள்ளிரவில் காரை வழிமறித்து தாக்கி, கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் கேரளாவைச் சேர்ந்த முகமூடிக் கொள்ளையர்கள் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்தவர் அஸ்லாம் சித்திக். இவர் விளம்பர ஏஜென்சி நடத்தி வருகிறார். இந்நிலையில் அஸ்லாம் சித்திக், கடந்த 13ம் தேதி அன்று தனது நண்பர்கள் உள்ளிட்ட 4 பேருடன் காரில் பெங்களூரு சென்று அங்கு கணினி மற்றும் உதிரி பாகங்களை வாங்கினார். பின்னர், அவர்கள் கோவை வழியாக காரில் மீண்டும் கொச்சிக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கோவை – பாலக்காடு புறவழிச்சாலையில் மதுக்கரை பகுதியில் அதிகாலை 3 மணியளவில் வந்து கொண்டிருந்தபோது, இரண்டு கார்களில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள், அஸ்லாம் சித்திக் உள்ளிட்டோர் வந்த காரை மறித்து நிறுத்தினர். பின்னர், ஒரு காரில் இருந்து இறங்கிய முகமூடி கொள்ளையர்கள் திடீரென சுத்தியலால் அஸ்லாம் சித்திக்கின் கார் கண்ணாடியை தாக்கி உடைத்தனர். இதனால் காரை சிறிது பின்னால் இயக்கினார்.

அப்போது மற்றொரு காரில் இருந்து கொள்ளையர்கள் கீழே இறங்கினர். இதையடுத்து அஸ்லாம் சித்திக் காரை வேகமாக மீண்டும் முன்னோக்கி இயக்கி அங்கிருந்து தப்பிச் சென்றார். பின்னர் அவர் இதுகுறித்து மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

இதில் காரை மறித்து கொள்ளையடிக்க முயன்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிவதாஸ், ரமேஷ் பாபு, விஷ்ணு, அஜய்குமார் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஹவாலா பணம் இருப்பதாக எண்ணி காரை கொள்ளையடிக்க முயன்றதாக தெரிவித்தனர். கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours