விக்கிரவாண்டி அருகே பறக்கும் படை அலுவலர்கள் சோதனையின் போது காரில் கொண்டுவரப்பட்ட 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் 23 கிலோ வெள்ளிக் கொலுசுகள் உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற ஜூலை மாதம் 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் ஆணையம் சார்பில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் விரைவில் வேட்பாளரை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் தொடர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மேலக்கொந்தை பாலம் அருகே பறக்கும் படை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் வெள்ளிக் கொலுசுகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து காரில் வந்த வாக்கூர் கிராமத்தைச் சேர்ந்த கவியரசன் என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போது, உரிய ஆவணங்கள் இன்றி சுமார் 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான 23.234 கிலோ வெள்ளிக் கொலுசுகள் எடுத்துவரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை விக்கிரவாண்டி வருவாய் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
+ There are no comments
Add yours