அமைச்சரவை மாற்றம்- தஞ்சை திமுக நிர்வாகிகள் அதிருப்தி

Spread the love

தஞ்சாவூர்: தமிழக அமைச்சரவையில் ஐந்தாவது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திமுகவின் மூத்த நிர்வாகிகள் தங்களுக்கு இடம் கிடைக்கும் என பெரிதும் நம்பி இருந்த நிலையில் அவர்களுக்கு இடம் கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கியது. அப்போது டெல்டா மாவட்டங்களில் உள்ள எந்த ஒரு எம்எல்ஏக்களுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை .அப்போது எல்லோரும் டெல்டாவில் உள்ள எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு நானே டெல்டாக்காரன் தான்',முதல்வரே டெல்டாவை சேர்ந்தவர்’ என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

பின்னர் திருவிடைமருதூர் எம்எல்ஏ கோவி.செழியன் தமிழக அரசின் தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டார். ஆனாலும் டெல்டாவில் உள்ளவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு அமைச்சரவை மாற்றத்தின் போது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆறு திமுக எம்எல்ஏக்களில் ஒருவருக்காவது அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்த்தனர் ஆனால் மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி. ராஜாவுக்கு தொழில்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது . இதனால் அப்போது தஞ்சாவூர் மாவட்ட எம்எல்ஏக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக துணை முதல்வர் பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்க வேண்டும் என மாநில முழுவதும் திமுகவினர் பொதுக்குழு கூட்டங்களை நடத்தி தீர்மானங்களை நிறைவேற்றினர். அதேபோல் டெல்டா மாவட்டங்களிலும் இந்த கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. அப்போது துணை முதல்வர் பதவி வழங்கும்போது அமைச்சரவையிலும் நிச்சயம் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதில் டெல்டா மாவட்டத்தில் ஐந்து முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட திருவையாறு எம்எல்ஏ துரை. சந்திரசேகரன் தனக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்தார். அதே போல் நான்கு முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகனும் தனக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என பெரிதும் நம்பி இருந்தனர் .

இந்த நிலையில் டெல்டாவில் மூன்று முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட கோவி. செழியனுக்கு அமைச்சரவையில் தற்போது இடம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் மூத்த திமுக நிர்வாகிகளுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் திமுகவினர் மத்தியிலேயே சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக திமுகவினர் தெரிவித்தனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours