சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் செயலியை உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரி உள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. தற்போது மாநகரப் பேருந்துகள், புறநகர் மின்சார ரயில்கள், மற்றும் மெட்ரோ ரயில் என பல்வேறு திட்டங்கள் பொதுப்போக்குவரத்திற்காக பயன்பாட்டில் இருந்து வருகிறது. இருப்பினும் சாலைகளில் வாகன நெரிசல் என்பது தவிர்க்க முடியாதது என்பதால் பயணம் செய்வோர் தங்கள் செல்லும் இடங்களுக்கு செல்வதற்கு தாமதமாவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
பேருந்தில் பயணித்து, பின்னர் அங்கிருந்து மின்சார ரயில்களில் சென்று இணைப்பு பயணங்களின் போது மட்டுமே குறிப்பிட்ட காலத்திற்குள் செல்ல முடிகிறது. குறிப்பாக சென்னை புறநகரில் வேலைக்கு செல்வோர், மின்சார ரயில்கள் மூலம் பயணித்து பின்னர் அங்கிருந்து பேருந்துகள் மூலம் பயணிக்க வேண்டி உள்ளது. இதனால் அதிக பொருட்செலவு ஏற்படுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் சார்பில், அனைத்து வகையான பயணங்களையும் ஒரே பயணச்சீட்டில் செய்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரே ஒரு பயணச்சீட்டை வாங்கிக் கொண்டு சென்னையில் பேருந்து, புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் என அனைத்து வகையான போக்குவரத்து திட்டங்களிலும் பயணிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக தனியாக செயலி ஒன்றை உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரி உள்ளது. கியூஆர் கோடு மூலம் அனைத்து போக்குவரத்துகளிலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் வகையில் இந்த செயலி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டே இந்த திட்டம் குறித்து முடிவு செய்யப்பட்டிருந்தாலும், தற்போது தான் செயலிக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours