போக்குவரத்து விதிகளை மீறியதாக ஐஏஎஸ் அதிகாரி மனைவிக்கு அபராதம் விதிக்கப்பட்ட விவகாரத்தில், எல்லை தாண்டி வழக்குப் பதிவு செய்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் உட்பட இருவரை பணியிடை நீக்கம் செய்து இணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு போக்குவரத்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் மனைவி போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறப்படுகிறது. அப்போது பணியில் இருந்த இரு போக்குவரத்து காவலர்கள் அவர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் இச்சம்பவம் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் சம்பவத்தன்று வழக்குப் பதிவு செய்த காவலர்கள் திருவல்லிக்கேணி போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் சிவலிங்கம் மற்றும் காவலர் கென்னடி என்பது தெரியவந்தது. மேலும் சிறப்பு உதவி ஆய்வாளர் சிவலிங்கம் மற்றும் காவலர் கென்னடி இருவரும் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியை தாண்டி சம்மந்தம் இல்லாமல் ஆயிரம் விளக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டதுடன் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சிறப்பு உதவி ஆய்வாளர் சிவலிங்கம் மற்றும் காவலர் கென்னடி ஆகிய இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து இணை ஆணையர் மகேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours