எடப்பாடி தரப்பு பதிலளிக்க அவகாசம் தந்து டெல்லி ஐகோர்ட் உத்தரவு!

Spread the love

எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்த முடிவுக்கு எதிரான வழக்கில் பதிலளிக்க அவகாசம் அளித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிரான வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலளிக்க 6 வாரம் அவகாசம் தந்து டெல்லி உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்த முடிவுக்கு எதிராக ராம்குமார் ஆதித்தன், கேசி சுரேன் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அதிமுக பொதுக்குழு மூலம் திருத்தப்பட்ட கட்சியின் சட்ட விதிகள் மாற்றம், தீர்மானங்களை ஏற்றது தவறு என்றும் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்ததும் தவறு எனவும் என மனுதாரர் கூறியுள்ளார். எனவே, இதுதொடர்பாக பதிலளிக்க எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு 6 வாரம் அவகாசம் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இதனிடையே, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையால் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்தனர்.

இருவரும், கட்சியில் மாறி மாறி நிர்வாகிகள் சேர்ப்பது நீக்குவது என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பின்னர் பொதுக்குழுவை கூட்டி, கட்சியில் இருந்து ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை நீக்கி, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றி தனது பலத்தை காண்பித்தார் எடப்பாடி பழனிசாமி. அதுமட்டுமில்லாமல், பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்ட பின்னர், அதற்கான தேர்தல் நடத்தப்பட்டு அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

அதிமுக பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்தல் ஓபிஎஸ் தரப்பில் பல்வேறு வழக்குகள் போடப்பட்டாலும், தீர்ப்பு இபிஎஸ்க்கு சாதகமாவே அமைந்தது. இதன்பின், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில், இரட்டை இலை சின்னமும் இபிஎஸ் வசமானது. மேலும், பொதுக்குழு தீர்மானங்கள், அதிமுகவில் விதி திருத்தம் மற்றும் நிர்வாகிகள் நீக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இந்த சூழலில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடக்கப்பட்டது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்த முடிவுக்கு எதிரான வழக்கில் பதிலளிக்க அவகாசம் அளித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours