மறைந்த தமிழக முதல்வர் அண்ணாதுரை குறித்து அண்ணாமலை கடந்த ஆண்டு சில கருத்துகளை தெரிவித்திருந்தார். அதாவது, 1956-ம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மனை பற்றி பேசிய அண்ணாதுரையை முத்துராமலிங்க தேவர் கடுமையாக எச்சரித்ததாகவும், அதன் பிறகு முத்துராமலிங்க தேவரிடம் அண்ணா மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடிவந்ததாகவும் அண்ணாமலை கூறியிருந்தார்.
அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தான் பேசியதற்கு அந்தக் கால செய்தித்தாள்களில் ஆதாரம் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். ஆனால், முத்துராமலிங்க தேவர் அண்ணாவை பார்த்து அப்படி எதுவும் கூறவில்லை என பத்திரிகைகள் தெரிவித்தன.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலை மீது பியூஷ் மனுஷ் சேலம் 4-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், “அண்ணாமலை மீது இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான சட்டப்பிரிவுகள் கீழ் வழக்கு தொடரப்பட்டிருந்தால் இதற்கு அரசின் அனுமதியை பெற வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, பியூஷ் மனுஷ் அளித்த புகாரில் முகாந்திரம் இருப்பதாக முடிவு செய்த தமிழக அரசு, அதனை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. இதனை பரிசீலித்த ஆளுநர் ரவியும், அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்ய ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு இன்று ஓர் ஆணையை வெளியிட்டது. இதன் நகல் சேலம் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த சில தினங்களில் விசாரணைக்கு வரும் போது, அண்ணாமலையை ஆஜராக கோரி அவருக்கு சம்மன் அனுப்பப்படும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 3 ஆண்டுகளில் என் மீதும், பாஜக நிர்வாகிகள் மீதும் உண்மையைப் பேசியதற்காக ஏராளமான வழக்குகளை தொடுத்துள்ளது. இப்போது என் மீது வழக்கு தொடர அனுமதி வழங்கி இருக்கிறது. எத்தனை வழக்குகளை என் மீது போட்டாலும், நான் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது. உண்மையை பேசியதற்காக என் மீது வழக்கு போடுகிறார்கள். போதைப்பொருள் வியாபாரிக்கு கட்சியில் பொறுப்பு வழங்கிய திமுகவின் உண்மைநிலை என்னவென்று மக்களுக்கு தெரியும்” என அண்ணாமலை கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours