சென்னை: துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாரம்பரிய முறைப்படி உடை அணிய உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
துணைமுதல்வர் உதயநிதி, பொதுவாக திமுக சின்னம் பொருத்தப்பட்ட டிசர்ட்டையே அணிந்து வருகிறார். அரசு பணியின்போதும் அவர் டிசர்ட் அணிந்து வருவது பேசும் பொருளாக மாறி வருகிறது. அதனால், அவர் பாரம்பரிய முறைப்படி, அமைச்சர்களுக்கு உரிய உடை அணிய வேண்டும் என ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக வழக்கறிஞர் சத்யகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறையால் வெளியிடப்பட்ட 2019 ஜூன் 1-ஆம் தேதியிட்ட அரசு உத்தரவு எண் 67, அனைத்து அரசு ஊழியர்களும் நேர்த்தியான, சுத்தமான, முறைப்படியான உடைகளை உடுத்த வேண்டும் என்று கூறுகிறது.
அரசாணையின்படி, ஆண் ஊழியர்கள் தமிழ் கலாசாரம் அல்லது இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் முறைப்படியான உடைகள் (formal dress) பேண்ட் அல்லது வேஷ்டி உடுத்த வேண்டும். ஆனால், தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், அனைத்து அரசு நிகழ்ச்சிகளில் டி – சர்ட் அணிந்து வருவதாகவும், தமிழ்நாடு தலைமைச் செயலத்தின் பரிந்துரைக்கப்பட்ட ஆடை வரன்முறையை அமைச்சர் அலுவலகத்திலும், துணை முதல்வர் அறையிலும் அவர் பின்பற்றாமல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
உதயநிதியின் செயல்கள் அரசியலமைப்புக்கு எதிரானவை, சட்ட விரோதமானவை, சட்டத்திற்கு புறம்பானவை மற்றும் அரசாணைக்கு எதிரானது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், முறைப்படியான ஆடை வரன்முறையைக் கடைப்பிடிக்குமாறு உதயநிதிக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுமீது விரைவில் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
+ There are no comments
Add yours