சென்னை: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழலில், அந்த தேர்தல் தற்போது தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் விரைவில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையை தவிர தமிழக முழுவதும் வாக்கு பெட்டிகளை தயார் நிலையில் வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதுதான் இந்த எதிர்பார்ப்புக்கு காரணம்
தமிழகத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர்த்து, உள்ளாட்சி அமைப்புகளின் கீழும் மக்கள் பிரதிநிதிகள் செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை ஊரகம், நகர்ப்புறம் என இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் இருக்கிறது.
மாநகராட்சி மேயர், துணை மேயர், வார்டு கவுன்சிலர்கள், நகராட்சி தலைவர், நகராட்சி துணைத் தலைவர், கவுன்சிலர்கள் என நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. இவை தவிர்த்து ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித் தலைவர், வார்டு கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்க ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டில் 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. வார்டு வரையறை பிரச்சினை, எல்லை தீர்மானம் உள்ளிட்ட காரணமாக ஒன்பது மாவட்டங்களில் தாமதமாக அதாவது 21 மாதங்கள் கழித்து தேர்தல் நடத்தப்பட்டது.
27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற நிலையில், மற்ற ஒன்பது மாவட்டங்களுக்கு 2021ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த நிலையில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்ற தலைவர், வார்டு கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்டவர்களின் பதவிக்காலம் வரும் ஜனவரி 5ஆம் தேதி உடன் நிறைவடைகிறது. இதன் காரணமாக அதற்கு முன்னதாகவே தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்பட்டிருக்கிறது.
+ There are no comments
Add yours