தருமபுரம் ஆதீனத்தை ஆபாச வீடியோ இருப்பதாக கூறி மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தை பதவியில் இருந்து நீக்கி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தின் ஆதினபதியாக மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இருந்து வருகிறார். இவரது ஆபாச வீடியோ இருப்பதாக கூறி சிலர் பணம் கேட்டு மிரட்டினர். இது தொடர்பாக தருமபுரம் ஆதீனம் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம், ஆடுதுறை வினோத், திருவெண்காடு விக்னேஷ், செம்பனார்கோயில் கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் தலைமறைவாக இருந்த ஆதீனத்தின் உதவியாளர் செந்தில் என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பான வழக்கு மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அகோரத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், திருவாரூர் மாவட்ட தலைவர் பாஸ்கர், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம், திருவாரூர் மாவட்ட பொதுச் செயலாளர் செந்திலரசன் ஆகிய மூவரை அவர்கள் வகிக்கும் பொறுப்பிலிருந்து உடனடியாக விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தற்போது அகோரம் ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில் பாஜக மேலிடம் நடவடிக்கை எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours