பாஜக எடுத்திருக்கும் கடைசி அஸ்திரம்… முதலமைச்சர் !

Spread the love

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தனது அனைத்து அஸ்திரங்களும் பயன்படாமல் போனதால், வேறு வழியில்லாமல் சிஏஏ என்கிற கடைசி அஸ்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி கையில் எடுத்திருப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 1955-ம் ஆண்டு முதல் அமலில் இருந்த குடியுரிமைச் சட்டத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டில் சில மாற்றங்களை செய்து மசோதாவாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த மசோதாவின் படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மத ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகியதால் இந்தியாவில் தஞ்சம் புகுந்த கிறிஸ்தவர்கள், இந்துக்கள், பார்சிகள் உள்ளிட்ட மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமையை அளிக்கும் விதமாக அந்த சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதனிடையே, இந்த சிஏஏ சட்ட மசோதாவை நிறைவேற்றக் கூடாது என வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக, முஸ்லிம்கள் அதிக அளவில் இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டனர். மற்ற மதத்தினருக்கு குடியுரிமை அளிக்கும் போது, முஸ்லிம்களுக்கு மட்டும் ஏன் வழங்கக் கூடாது? எனக் கேள்வியெழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இவ்வாறு பலத்த எதிர்ப்புக்கு மத்தியிலும், சிஏஏ சட்ட மசோதவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மோடி அரசு நிறைவேற்றியது. ஆனால், இந்த சட்டத்தை உடனடியாக அமலுக்கு கொண்டு வராமல் தொடர்ந்து தள்ளி வைத்துக் கொண்டே இருந்தது. இந்த சூழலில், சிஏஏ சட்டம் இந்தியா முழுவதும் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு இன்று மாலை (மார்ச் 11) அதிரடியாக அறிவித்தது.

இதற்கு காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “குடியுரிமை என்ற மனிதநேயக் கொள்கையை மதம் மற்றும் இனத்தால் வேறுபடுத்தும் பிளவுவாதக் கொள்கையாக மாற்றியுள்ளது ஒன்றிய பாஜக அரசு.

தேர்தலில் தனது அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போன நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலமாக கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகு சட்டத்தை கொண்டு வந்த பாஜகவையும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அடிமை அதிமுகவையும் தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்” எனக் கூறினார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours