புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பில் உள்ள பட்டியலின மக்கள் பயன்படுத்த கூடிய குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், ஒரு நபர் ஆணையமும் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக அண்மையில் 8 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, டிஎன்ஏ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. குற்றவாளிகளை கண்டறிய டிஎன்ஏ பரிசோதனை நடத்த வேண்டும் என்று சிபிசிஐடி சம்மன் அனுப்பிய நிலையில், டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் ஏற்கனவே 21 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக இடைக்கால அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் இடைக்கால அறிக்கையை நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் தாக்கல் செய்தது.
காவல்துறை விசாரணை மந்தகதியில் உள்ளதாக அறிக்கையில் நீதியரசர் சத்தியநாராயணன் தகவல் தெரிவித்துள்ளார். வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக இதுவரை 191 சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளது என்றும் சந்தேகத்துக்குரிய 25 பேரிடம் மரபணு சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours