தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் அதேபோல வெயில் காலம் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரையிலும் கொளுத்தும். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழை பெய்தது. டிசம்பர் 4ஆம் தேதி சென்னையில் ஒரே நாளில் அதிதீவிர கனமழை கொட்டித் தீர்த்தது.
அதேபோல டிசம்பர் 17, 18 தேதிகளில் தென் மாவட்டங்களில் ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துத் தீர்த்தது. வடகிழக்கு பருவமழையானது கடந்த ஜனவரி மாதம் தமிழகத்தில் இருந்து விலகிச் சென்றது. அதன்பிறகு சில காலம் குளிர் நிலவியது. மார்ச் மாதம் தொடங்கிவிட்டதால் தமிழ்நாடு முழுவதும் தற்போது வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் மழை எதுவும் பெய்யவில்லை, வறண்ட வானிலையே நிலவியது. அதிகபட்சமாக ஈரோட்டில் 39.00 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. குறைந்தபட்சமாக நாமக்கல்லில் 16.0 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில், இன்று முதல் மார்ச் 9ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் வரும் 5ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை நிலை என்ன?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அதாவது அடுத்த ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பே இல்லை என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வெயில் அதிகரிக்கும் என்பதால் வெளியே செல்லும்போது பெண்கள், குழந்தைகளை அழைத்துச் செல்வோர் குடையை மறக்காமல் எடுத்துச் செல்ல கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
+ There are no comments
Add yours