கொச்சி: பார்வதி, ஊர்வசி பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘உள்ளொழுக்கு’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
கேரளாவை உலுக்கிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ‘Curry & Cyanide: The Jolly Joseph Case’ என்ற ஆவணப்படம் அண்மையில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி கவனம் பெற்றது. இதனை இயக்கிய கிறிஸ்டோ டோமியின் அடுத்த படம் ‘உள்ளொழுக்கு’. இதில் பார்வதி, ஊர்வசி பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? – ட்ரெய்லர் முழுக்கவே அடைமழை ஒரு முக்கிய அங்கமாக காட்டப்படுகிறது. மழையின் இடையே ஜோஸ் குட்டி என்ற மத்திய வயது நபரின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் நடப்பதும் காட்டப்படுகிறது. இறந்த நபரின் மனைவியாக பார்வதியும், அம்மாவாக ஊர்வசியும் வருகின்றனர். மாமியார் – மருமகளுக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாக தெரிகிறது.
கர்ப்பமாக இருக்கும் பார்வதி, எப்போதும் சீரியஸாக இருக்கும் ஊர்வசி இருவருக்கும் இடையிலான உணர்வுரீதியான போராட்டங்களே இப்படத்தின் மையக்கருவாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. “ஒவ்வொருவருக்கும் மறைக்க ஏதோ ஒன்று இருக்கிறது; பொய்கள் மூழ்கிவிடும்; ரகசியங்கள் வெளிப்படும்” என்ற வரிகளின் படி பார்வதியின் நடவடிக்கைகளுக்குப் பின்னால் சில ரகசியங்கள் இருப்பதாக காட்டப்படுகிறது. சைக்காலஜிக்கல் த்ரில்லர் படங்களுக்கே உரிய டார்க் ஆன டோன் ட்ரெய்லர் முழுக்கவே ஒருவித தீவிரத் தன்மையை தக்கவைக்கிறது. படம் வரும் ஜூன் 21 திரையரங்குகளில் வெளியாகிறது. ‘உள்ளொழுக்கு’ ட்ரெய்லர் வீடியொ:
+ There are no comments
Add yours