வங்கதேசத்தில் மாணவர் வன்முறை வெடிக்க காரணமாய் இருந்த இடஒதுக்கீடு ரத்து.

Spread the love

டாக்கா: வங்கதேச அரசு வேலைவாய்ப்புகளில் விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30% இடஒதுக்கீட்டை ரத்து செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேநேரம், விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கான வேலை ஒதுக்கீட்டை 30 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்குமாறு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக வங்கதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 30% இடஒதுக்கீடு குறித்த வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வரவிருந்த நிலையில், வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டுப் போராட்டம் தீவிரமடைந்ததால் இன்றைக்கே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

முன்னதாக, தீர்ப்பு வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற வாயிலுக்கு வெளியே ராணுவ டாங்கர் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. மேலும், தலைநகர் டாக்கா முழுவதும் ராணுவக் குழுக்கள் நிறுத்தப்பட்டன. இதற்கிடையே, வங்கதேச வன்முறைப் போராட்டத்தில் 151 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வங்கதேச கலவரம்: அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு தொடர்பாக சமீபத்தில் வங்கதேச உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஓர் உத்தரவு மாணவர்களைக் கிளர்ந்தெழச் செய்து வீதிகளில் இறங்கிப் போராடத் தூண்டியுள்ளது. கடந்த 1971-ம் ஆண்டு வங்கதேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இடையில் ரத்துச் செய்யப்பட்டிருந்த இந்த இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும் என்று வங்கதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 1-ம் தேதி முதல் அங்கு போராட்டம் தொடங்கியது.

இதனால், வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது. அங்கு மாணவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையில் தொடர்ந்து மோதல் நடந்து வருவதால் நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருதரப்புக்கும் இடையிலான மோதல் நீடித்து வரும் நிலையில், இந்த வன்முறைச் சம்பவங்களுக்கு இதுவரை 130 பேர் உயிரிழந்தனர்; ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். அரசின் அதிகாரபூர்வ தொலைக்காட்சி வளாகம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் செய்தித் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு தடைபட்டன.

கலவரத்தைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மொபைல் இணைய சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மறு உத்தரவு வரும் வரையில் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம், காவல் துறையின் இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. அதன் முகப்பு பக்கங்களில் ‘இனி இது போராட்டம் இல்லை, இப்போது இது போர்’ என்ற வாசகங்கள் ஒளிர்கின்றன. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர வங்கதேசத்தின் ஆளுங்கட்சி நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. அமைதியை நிலைநாட்ட ராணுவத்துக்கு அரசு அழைப்பு விடுத்தது. இந்நிலையில், வங்கதேச அரசு வேலைவாய்ப்புகளில் விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30% இடஒதுக்கீட்டை ரத்து செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours