விருதுநகர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை ராதிகா, விருதுநகர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட மதுரை மாவட்டம் சிலைமான் பகுதியில் கணவர் நடிகர் சரத்குமாருடன் பிரச்சாரம் செய்தார்.
அப்போது ராதிகா பேசியதாவது: “பாஜக வேட்பாளராக போட்டியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். டெல்லியில் இருப்பவர்களுக்கு ஏன் ஓட்டுப்போட வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். நீங்கள் ஓட்டுப்போட்டால் தான் டெல்லியில் நல்ல ஆட்சி அமையும். இந்தியாவில் 10 ஆண்டுகளாக நல்லாட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி 3-வது முறையாகவும் பிரதமராக வர வேண்டும்.
பிரதமர் மோடி பத்தாண்டு கால ஆட்சியில் இந்தியாவை பாதுகாப்பாக வைத்துள்ளார். இந்தியா வளர்ச்சி அடைந்த பெரிய நாடாக உள்ளது. வெளிநாடுகள் சென்றால் இந்தியர்களை பெருமையாக பார்க்கின்றனர். ஒவ்வொருக்கும் அந்த பெருமையை மோடி தந்துள்ளார்.
மத்திய அரசின் நலத்திட்டங்கள் உங்களை சென்றடைய வேண்டும். விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூர் 2 முறை எம்பியாக இருந்துள்ளார். அவர் எதையும் செய்யவில்லை. இரண்டு முறை வாய்ப்பு கொடுத்தும் எதையும் செய்யாத மாணிக்கம் தாகூரை ஒதுங்க சொல்லுங்கள்.
விருதுநகருக்கு நான் வந்துள்ளேன். உங்கள் சித்தி வந்துள்ளேன். அக்கா வந்திருக்கிறேன். சகோதரி வந்திருக்கிறேன். உங்களுக்கு நல்ல பிரதிநிதியாக இருந்து, உங்களுக்கு வேண்டியதை டெல்லியில் வாதாடி வாங்கித்தருவேன். விருதுநகரில் சுகாதாரம் இல்லை, நல்ல மருத்துவமனை இல்லை. பேருந்து வசதியில்லை. நான் எம்பியானால் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வந்து சேரும்” என்றார்.
பின்னர் விரகனூர், அனுப்பானடி, சிந்தாமணி, பராசக்திநகர், அவனியாபுரம் பேருந்து நிலையம், பெருங்குடி, வலையங்குளம் பகுதியில் ராதிகா பிரச்சாரம் செய்தார்.
+ There are no comments
Add yours