சர்ச்சைக்குரிய எம்.பி.யான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீண்டும் உத்தரப் பிரதேசத்தின் கைசர்கன்ச்சில் போட்டியிட அடம்பிடிக்கிறார். இவரது மகள் அல்லது மகனுக்கு அளிக்கப்பட உள்ள வாய்ப்புக்கும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தேசிய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் பாஜக எம்பியான பிரிஜ் பூஷண் சரண் சிங். உ.பி/யின் கைசர்கன்ச் தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிட விரும்புகிறார். ஆனால், இவர் மீது சில மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை எழுப்பியிருந்தனர். இவர் மீதான நடவடிக்கைக்காக பல மாதங்கள் டெல்லியின் ஜந்தர் மந்தரிலும் போராட்டம் நடத்தி இருந்தனர். இதில் பெரும் சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்பி சரண் சிங் மீதான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
இந்தச் சூழலில் அவரை மீண்டும் அதே தொகுதியில் மக்களவைக்காக போட்டியிட வைக்க பாஜக தயங்குகிறது. இதன் காரணமாக, சரண் சிங்குக்கு பதிலாக அவரது மனைவி கெல்கிசிங் அல்லது மகன் பிரதீக் பூஷண் சிங்குக்கு வாய்ப்பளிக்க விரும்புகிறது. இந்த வாய்ப்பை சரண் சிங் ஏற்க மறுத்து விட்டார்.
இதனால், தாம் மேலும் அவமானப்படுவோம் எனக் கருதி அத்தொகுதியில் தானே மீண்டும் போட்டியிட அடம்பிடிப்பதாகத் தெரிகிறது. இப்பிரச்சினையின் காரணமாக பாஜக உ.பி.யின் 80 தொகுதிகளில் கைசர்கன்ச்சிலும் வேட்பாளர் அறிவிப்பை வெளியிடவில்லை.
இதுபோன்ற வேறு சில காரணங்களால் உ.பி.யின் 12 தொகுதிகள் பாஜக வேட்பாளரை அறிவிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கால அவகாசம் முடிய இன்னும் இரண்டு நாட்களே (ஏப்.10) உள்ளது உள்ளது. இந்த 12 தொகுதிகளில் உ.பி.யின் ரேபரேலி, மெயின்புரி, பிரயாக்ராஜ், தியோரியா, பலியா, காஜிபூர், பச்சேல்ஷர், பெரோஸாபாத், பதோஹி,பூல்புர், மற்றும் கவுசாம்பி ஆகியன இடம்பெற்றுள்ளன.
+ There are no comments
Add yours