ஐபிஎல் – மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம்!

Spread the love

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2024ம் ஆண்டு மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி வீரர்களின் மினி ஏலம் வருகிற 19ம்தேதி துபாயில் நடக்கிறது. ஏலத்தில் 214 இந்திய வீரர்கள், 119 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 333 பேர் இடம் பிடித்துள்ளனர். இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் மும்பை அணியின் கேப்டன் யார் என்ற குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டு வந்தார். அவரது தலைமையில்தான் 5 முறையும் மும்பை இந்தியன்ஸ் அணி பட்டம் வென்றது. அதே நேரத்தில், டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய மூன்று வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கும் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டு வந்தார். ஆனால், கடந்த ஓராண்டாக டி20 தொடர்களில் மட்டும் மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் அணியை பிசிசிஐ களம் இறக்கி வருகிறது.

அடுத்த ஆண்டு உலகக்கோப்பை டி20 தொடர் நடைபெறும் நிலையில் அதற்கான அணியை தயார் செய்யும் வகையில் பிசிசிஐ வியூகங்களை வகுத்து வந்தது. அதன்படி, அடுத்த ஆண்டு உலகக்கோப்பை தொடரில் ரோகித், கோலி போன்ற மூத்த வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்காது என பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்த சூழலில், தான் ஐபிஎல்-லில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் வாங்கியது மும்பை அணி. இதன் மூலம், 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மும்பை அணிக்கு ஹர்திக் பாண்டியா திரும்பினார்.

தற்போது, வரும் ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார் என அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது மும்பை இந்தியன்ஸ். அதோடு, கடந்த 10 ஆண்டுகள் அணியை வழிநடத்திய ரோகித் சர்மாவுக்கும் மும்பை அணி நிர்வாகம் நன்றியை தெரிவித்துள்ளது. சச்சின் தெண்டுல்கர், ஹர்பஜன் சிங், ரிக்கி பாண்டிங், ரோகித் சர்மா வரிசையில் மும்பை அணிக்கு ஹர்திக் பாண்டியா தலைமையேற்க இருக்கிறார். திடீரென வெளியான இந்த அறிவிப்பு ரோகித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், எதிர்காலத்தை கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours