நடிகர் மாரிமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் திரண்டு வந்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து நேற்று காலை மாரடைப்பால் சென்னையில் காலமானார். இதையடுத்து சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டது.
திரைத்துறையினர், அரசியல் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் மாரிமுத்துவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் நேற்று மாலை அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், இன்று அதிகாலை சென்றடைந்த மாரிமுத்துவின் உடல், அவர் பிறந்த பசுமலைத்தேரி கிராமத்தில் வைக்கப்பட்டுள்ளது. மாரிமுத்துவின் உடலை கண்டு குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
பசுமலைத்தேரி கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அனைவரும் அஞ்சலி செலுத்திய பிறகு உடல் காலை 10.30 மணிக்கு தகனம் செய்யப்படுகிறது.
+ There are no comments
Add yours