மருத்துவ பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் மாநிலம் தழுவிய உண்ணாவிரதம் நடைபெற்றது.
சென்னையில் வள்ளுவர் கோட்டம் முன்பாக திமுக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தை, திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தொடங்கி வைத்தார்.
அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், பி கே சேகர்பாபு, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மருத்துவ மாணவர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். திராவிடர் கழக தலைவர் கி வீரமணி பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் அரண்மனை முன்பாக நடைபெற்ற உண்ணாவிரத போரட்டத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர் எஸ் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார். சட்டமன்ற, நாடாளுமன்ற இன்னாள் முன்னாள் உறுப்பினர்கள், திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணியினர் இந்த உண்ணாவிரத்தில் பங்கேற்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் மாநகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதத்தில் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினரும் கலந்துகொண்டனர்.
மாலையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர்.
இதே போன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் மாநில அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மதுரையில் மட்டும் 23ஆம் தேதி உண்ணாவிரதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours