தன் துறுதுறு நடிப்பாலும் வசீகர புன்னகையாலும் ரசிகர்களை கவர்ந்த ‘நவரச நாயகன்’ கார்த்திக்கின் 63 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் குறித்தான சில சுவாரஸ்ய தகவல்களைப் பார்க்கலாம்.
பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் கார்த்திக். முரளி என்ற இயற்பெயர் கொண்டவர் சினிமாவிற்காக ‘கார்த்திக்’ என மாற்றிக் கொண்டார்.
‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் தனது இளமைத் துள்ளலான நடிப்பில் அறிமுகத்திலேயே அனைவரையும் கவர்ந்தார்.
கார்த்திக்கின் சினிமா பயணத்தில் மறக்க முடியாத கதாபாத்திரம் என்றால் அது ‘மெளனராகம்’ படத்தின் மனோகர். படத்தில் அரைமணி நேரத்திற்கும் குறைவாகவே வருவார். ஆனால், ‘மிஸ்டர் சந்திரமெளலி’ என கதாநாயகியை சீண்டும் அவரது கலாட்டாவான நடிப்பும், வசீகரமும் ரசிகர்கள் மத்தியில் என்றென்றும் மறக்க முடியாததாக அமைந்தது.
மேலும், அவரது கதாபாத்திரம் எதிர்பாராத விதமாக இறந்து விடுவதும் அந்த ஃபிளாஷ்பேக் காட்சிகளின் குதூகலமும் கதாபாத்திரத்திற்கு மேலும் வலுவூட்டியது. குறிப்பாக, கார்த்திக் திரையில் எண்ட்ரி கொடுக்கும் போதெல்லாம் ராஜாவும் தன் பின்னணி இசையால் அதகளம் செய்திருப்பார்.
சாக்லேட் பாயாக வலம் வந்த கார்த்திக்கை கிராமங்களிலும் கொண்டு போய் சேர்த்ததில் ‘வருஷம் பதினாறு’, ‘கிழக்கு வாசல்’, ‘பொன்னுமணி’ போன்ற படங்களுக்கு பெரிய பங்குண்டு.
ரஜினியுடன் ‘நல்லவனுக்கு நல்லவன்’ என்ற படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் கார்த்திக்.
அவரது இரண்டாம் இன்னிங்க்ஸில் சுந்தர்.சி உடன் இணைந்து பணிபுரிந்த ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘மேட்டுக்குடி’, ‘அழகான நாட்கள்’, ‘கண்ணன் வருவான்’ போன்றவை ஹிட் அடித்தது. இந்தப் படங்களில் நடிகர் கவுண்டமணியுடனான நகைச்சுவை காட்சிகளும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்போதும் கதைகளையும், கதாபாத்திரத்தையும் தேர்ந்தெடுத்து நடித்து வருபவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
+ There are no comments
Add yours